மதுரை கள்ளழகர் விழா: போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் அறிவிப்பு!
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, மதுரை மாநகர காவல் துறை விரிவான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்துமிட ஒழுங்குமுறை திட்டத்தை அறிவித்துள்ளது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி மதுரை நகர காவல்துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வைகை ஆற்றின் தெற்கு மற்றும் வடக்கு கரைகளில் ஒபுலா படித்துறை அருகே வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. தெற்கு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் AV பாலம் அல்லது செல்லூர் புதிய பாலம் வழியாக வடக்கு பகுதிக்கு செல்ல முடியாது. அங்கீகரிக்கப்பட்ட வாகன நிறுத்துமிட அனுமதி பாஸ் வைத்திருப்பவர்கள், ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.
பச்சை நிற பாஸ் வைத்திருப்பவர்கள் AV பாலத்தின் தெற்கு பகுதியில் வாகனங்களை நிறுத்தலாம். நீல நிற பாஸ் வைத்திருப்பவர்கள் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் பெரியார் சிலை அருகே வாகனங்களை நிறுத்த வேண்டும். நகர பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், அழகர்கோவில் சாலை மற்றும் நத்தம் சாலை வழியாக கீழவாசல் அல்லது சிம்மக்கல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் ரேஸ் கோர்ஸ் சாலை, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு மற்றும் கே.கே.நகர் வழியாக திருப்பி விடப்படும்.
பள்ளி மைதானங்களில் ஏற்பாடு
பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நத்தம் சாலை அல்லது மேலூர் சாலைக்கு செல்லும் வாகனங்கள், மஹால் சாலை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த கோகலே சாலை, YMCA, ITI மற்றும் நகரின் பல்வேறு பள்ளி மைதானங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தலாம்.
வாகனங்களை நிறுத்த அனுமதி உண்டு
ஆற்றில் இறங்கும் நிகழ்வை பார்ப்பவர்கள் காந்தி அருங்காட்சியகம், ரேஸ் கோர்ஸ் மைதானம் மற்றும் PWD வளாகம் அருகே வாகனங்களை நிறுத்தலாம். கீழமாசி மற்றும் வடக்கு மாசி வீதிகளில் ஒரு பக்கத்தில் மட்டும் வாகனங்களை நிறுத்த அனுமதி உண்டு. அங்கீகாரம் இல்லாத வாகனங்கள், அஞ்சலி-அண்ணா சிலை மற்றும் கோரிப்பாளையம் போன்ற பகுதிகளில் நுழைய அனுமதி இல்லை. மதுரை நகர காவல்துறை பக்தர்களின் பாதுகாப்பையும், வசதியையும் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கருத்துக்கள்