80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை : இபிஎஸ் காட்டமான கேள்வி!
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள தராசு கிராமத்தில், 80 வயது மூதாட்டி கவுசல்யா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில், கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த ஐந்து வாலிபர்கள் மூதாட்டியை இழுத்துச் சென்று கொடூரமாக தாக்கியதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மூதாட்டி, தனது மகன் ஷங்கருடன் வசித்து வந்த நிலையில், மாலையில் நடைபயிற்சிக்காக வெளியே சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
மூதாட்டி அணிந்திருந்த நகைகளையும் பறித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கடும் காயங்களுடன் மயங்கிய நிலையில் சவுக்கு தோப்பில் கிடந்த மூதாட்டியை, அப்பகுதி மக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த கொடூர சம்பவம், கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி காவல்துறை, வழக்குப் பதிவு செய்து, காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டது.
முதற்கட்டமாக சுந்தரவேல் என்ற குற்றவாளி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடிபட்டார். அவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வளைத்தள பக்கத்தில் ” போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சியில், 80வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம்! கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை. 6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, “அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய” அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026-ல் இந்த திமுக அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்