advertisement

ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கலெக்டரிடம் மனு

டிச. 31, 2024 11:49 முற்பகல் |

ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பொறுப்பு நீட்டிப்பு செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது . 

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, போகலூர்,ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை என 11 ஊராட்சி ஒன்றியங்கள், 429 ஊராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வென்று ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்களின் கடந்த 5 ஆண்டு கால பதவிக்காலம் வரும் ஜனவரி 5 ல் நிறைவடைகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. 

கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சித்ரா மருது தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்  கோகிலா ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், துணைச் செயலாளர்கள் ராணி கணேசன் , உமர் பாரூக்,  செய்தி தொடர்பாளர் மலைக்கண்ணன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டமைப்பு வட்டாரத் தலைவர் நாகமுத்து, நாகலிங்கம், நாகேஸ்வரி வீரபத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

கடந்த 2020, 2021 ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் ஊராட்சி வளர்ச்சி திட்டப் பணிகள் முடங்கியதால், இவ்விரண்டு காலத்தை ஈடு செய்யும் பொருட்டு தங்களின் பதவி காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க தமிழக அரசு முன் வரவேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement