advertisement

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்- 2 பொதுத் தேர்வு ஆரம்பம் - ஆட்சியர் நேரில் ஆய்வு

மார். 04, 2025 3:47 முற்பகல் |

பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 15,037 மாணவர், மாணவியர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தகவல் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  பன்னிரெண்டாம் வகுப்புக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெற்றதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு தெரிவித்ததாவது :12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும்  நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 160 பள்ளிகளைச் சேர்ந்த 6,875 மாணவர்களும், 7,731 மாணவியர்களும், தனித்தேர்வர்களாக 431 மாணவ பெருமக்கள் என மொத்தம் 15,037 மாணவர், மாணவியர்கள் 64 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

மேலும் , 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்வு எழுதவுள்ள காது கேளாத, கண்பார்வையற்றோர், உடல் உறுப்புகளில் மாற்றுத்திறன் கொண்ட 97 மாணவர் - மாணவியர்கள், எந்தவித சிரமமின்றி தேர்வு எழுதும் வகையில் சொல்வதைக் கேட்டு எழுதுபவர்கள்  ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறன் கொண்ட மாணவர் - மாணவியர்களுக்கு தேர்வெழுதும் நேரத்தில் கூடுதலாக 1 மணி நேரம் மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுப் பணிகளில் 1,088 பேர் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு பணியில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி மேற்கொள்வார்கள். அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறை மூலம் உரிய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   
அதேபோல் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் போதிய குடிநீர் வசதி , உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் தடையின்றி மின்சாரம் வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர், மாணவியர்கள் எவ்வித அச்சமின்றி தேர்வு எழுதி வெற்றி பெற்றிட வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன தெரிவித்தார். ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement