advertisement

அரசுக் கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி - கும்பகோணத்தில் பரபரப்பு

பிப். 03, 2025 5:02 முற்பகல் |

 

கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவியொருவர், கல்லூரி கழிவறையில் பெண் குழந்தை பெற்றெடுத்து அதை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் திருமணம் ஆகாத நிலையில், கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் வகுப்பறையில் அமர்ந்து பாடத்தை கவனித்துக் கொண்டிருந்த மாணவிக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கழிவறைக்குச் சென்ற மாணவி பெண் குழந்தை பெற்றுள்ளார்.

இதையடுத்து அந்தக் குழந்தையை துணியில் சுற்றி கல்லூரியில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வகுப்பறைக்கு வந்து அமர்ந்துள்ளார். அப்போது அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதை பார்த்த சக மாணவிகள் அவரிடம் கேட்டபோது, மாதவிடாய் காரணமாக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், ரத்தப்போக்கு அதிகமானதைக் கண்ட சக மாணவிகள் பேராசிரியைகளிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவியை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சில மணி நேரத்திற்கு முன்புதான் மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், அதன் காரணமாக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவியிடம் விசாரித்த போது, தனக்கு பெண் குழந்தை பிறந்ததையும் அதனை குப்பைத் தொட்டியில் போட்டதையும் தெரிவத்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பேராசிரியர்கள், குப்பை தொட்டியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண் குழந்தையை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மாணவிக்கும் குழந்தைக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆடுதுறை மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கர்ப்பம் அடைந்திருப்பது தெரியவந்ததும் கலைக்க முயன்றதாகவும், ஆனால், கலைக்க முடியாத கட்டத்தை தாண்டி விட்டதால், குழந்தையை பெற்றெடுத்து அதனை மறைத்து விடலாம் என முடிவு செய்து, பிரசவம் எப்படி நடக்கிறது என யூடியூபில் பார்த்து வந்ததாகவும், அதன்படி தனக்கு பிரசவ வலி ஏற்பட்ட உடன் யூடியூபில் பார்த்தது போல் குழந்தையை பெற்றெடுத்தாகவும் கூறியுள்ளார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement