செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜூன் 8-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வண்ணம் தமிழ்நாடு அரசு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களை (Private Companies Job Fair) நடத்தி வருகிறது. மாதந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும் ஜூன் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 5,000 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பள்ளி படிப்பை முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, பல்வேறு துறைகளில் கல்வித்தகுதி பெற்றவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்புகளை பெறலாம்.
இந்த சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதன் மூலம் சுமார் 5,000 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவும் செய்து தரப்பட உள்ளது.
முகாம் நடைபெறும் இடம்
செங்கல்பட்டு மாவட்டத்தில், தைலாவரம் - கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தைலாவரம் திட்ட பகுதி (தைலாவரம் பேருந்து நிறுத்தம்) வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு கல்வித்தகுதிக்கு ஏற்ப முன்னணி தொழில் நிறுவனங்களில் பணி வாய்ப்பை பெறலாம்.
யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
இந்த முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு,12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். முகாமிற்கு வருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (Bio Data/ Resume) ஆகியவற்றுடன் நேரில் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்பவர்களின் வயது வரம்பு 18 முதல் 40 வரை இருக்க வேண்டும்.
இந்த முகாம் குறித்த விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், செங்கல்பட்டு என்ற முகவரியில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம். மேலும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வேலைநாடுநர்கள் முகாமில் கலந்துகொள்ள பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்