கூலி தொழிலாளி உடலை பீகாருக்கு மாற்றி அனுப்பிய விவகாரம்..அரசு மருத்துவர் டிரான்ஸ்பர்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் திருத்தணி விவசாயக் கூலி தொழிலாளி பிரேதத்தை மாற்றி பீகாருக்கு அனுப்பிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவரை இடமாற்றம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த புஜ்ஜிரெட்டிப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி ராஜேந்திரன்(60).இவர் கடந்த 3-ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,அவரது உடல் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமரர் அறையில் வைக்கப்பட்டிருந்தது.
அதேபோல் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் மாஞ்ஜி(55) என்பவர் வெங்கல் அருகே நெடுஞ்சாலை பணியின் போது உயிரிழந்தார். அவரது உடலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமரர் அறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மனோஜ் மாஞ்சி உடலை பிரேத பரிசோதனை செய்து பீகாருக்கு அனுப்புவதற்கு பதிலாக திருத்தணியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி ராஜேந்திரன் உடலை பிரேத பரிசோதனை செய்து பீகாருக்கு கடந்த 3 -ஆம் தேதி மாற்றி அனுப்பி வைத்தனர். இதனால் உடனே வாங்க வந்த ராஜேந்திரன் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ராஜேந்திரன் உடல் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக திருவள்ளூருக்கு நேற்று கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது உடலை மாற்றி அமைத்து அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜேந்திரன் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை அனுப்பி வைக்குமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அன்றைய தினம் பிரேத பரிசோதனை அறையில் பணியில் இருந்தவர்கள் தொடர்பாக மருத்துவமனை முதல்வர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு அறிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைத்தனர். அறிக்கை அடிப்படையில் அன்றைய தினம் பணியில் அலட்சியமாக செயல்பட்ட கிருஷ்ணா ஸ்ரீ என்பவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கருத்துக்கள்