ரவுடி ‘மிளகாய்பொடி’ வெங்கடேஷ் பாஜகவிலிருந்து நீக்கம் - நயினார் நாகேந்திரன் உத்தரவு
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகர், வீரவாஞ்சி தெருவைச் சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேஷ். இவருக்கு ‘மிளகாய்பொடி’ வெங்கடேஷ் என்ற அடைமொழியும் உண்டு.
தற்போது பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக இருந்த இவர் மீது ஆந்திரா, தெலங்கானாவில் செம்மரம் கடத்தல் வழக்கு, ஆவடி காவல் ஆணையரகத்தில் பண மோசடி, துப்பாக்கி வைத்து மிரட்டுதல் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பிரபல எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் டீலருடன் இணைந்து, மற்ற டீலர்களை மிரட்டியதாகவும், பணமோசடி செய்தாகவும் வெங்கடேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த திரு.K.R.வெங்கடேஷ் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்.ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்