advertisement

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தேரோட்டம்

மே 29, 2026 8:31 முற்பகல் |

 

உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசைக் கச்சேரி, பக்தி சொற்பொழிவு, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

9-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து காலை 9.15 மணிக்கு வெள்ளி பல்லக்கில் உற்சவ அம்மன் சர்வ அலங்காரத்துடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டார். சன்னதி தெரு, கன்னியம்பலம் மண்டபம், தெற்கு ரதவீதி, நடுத்தெரு வழியாக தேர் நிற்கும் கீழ ரத வீதியை அடைந்ததும், உற்சவ அம்மன், பட்டு மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.

கீழ ரத வீதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்ட தேர், தெற்கு ரத வீதி, மேலரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் கீழ ரதவீதியில் பகல் 1.30 மணிக்கு நிலையை அடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் உயரமான கட்டிடங்களில் இருந்து தேரின் மீது மலர் தூவி வரவேற்று வழிபட்டனர்.

தேரோடும் வீதிகளில் வழி நெடுகிலும் பக்தர்களுக்கு மோர், தண்ணீர் பாட்டில், பானகம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. தேர் நிலைக்கு வந்ததும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இன்று மாலை 5.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவும், இரவு 7 மணிக்கு பக்தி கர்நாடக இசைப் பாட்டும், 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement