தஞ்சையில் நூதனமாக லஞ்சம் வாங்கிய விஏஓ., கைது
திருவோணத்தில் பட்டா வழங்க லஞ்சம் தர வேண்டும், அதுவும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள இ-சேவை மையத்தில் உள்ள பெண்ணிடம் தர வேண்டும் என கூறிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் அம்மங்குடி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவருக்கு திருவோணம் கிராமத்தில் சொந்தமாக ஒரு நிலம் மற்றும் தோப்பு விடுதி உள்ளது. இதில் நிலம் மட்டும் கூட்டுப் பட்டாவில் உள்ள நிலையில் அதற்கு தனிப்பட்ட பட்டா பெறுவதற்கு குமரேசன் முடிவு செய்தார்.
அதற்காக அவர் தோப்பு விடுதி கிராம நிர்வாக அலுவலரான புதுக்கோட்டை மாவட்டம் மட்டங்கால் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 32) என்பவரை அணுகியுள்ளார். அப்போது முருகேசன் தனிப்பட்ட பட்டா வாங்குவதற்கு ரூ.5,000 லஞ்சமாக தர வேண்டும் என குமரேசனிடம் கூறியுள்ளார். மேலும், அந்த லஞ்சப் பணத்தை திருவோணம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள இ-சேவை மையம் நடத்தி வரும் ஊர்காவல் படையில் பணியாற்றும் சுதா என்பவரிடம் கொடுத்து விடுமாறும் கூறியுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன் இது குறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை குமரேசனிடம் கொடுத்து, அதை சுதா நடத்தி வரும் இ சேவை மையத்தில் கொடுக்க செய்தனர். பின் அந்த பணத்தை சுதா, கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் வழங்கினார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனையும், சுதாவையும் கையும் களவுமாய் பிடித்தனர். பின்னர், இருவரையும் லஞ்ச ஒழிப்பு பிரிவு துறையினர் திருவோணம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அலுவலகத்தில் ஏதேனும் லஞ்சப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர்.
கருத்துக்கள்