பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் : தூத்துக்குடி ஆட்சியருடன் கலந்துரையாடல்
மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சாதிப்பதற்கு எந்தஒரு சூழ்நிலையும் ஒருபோதும் தடையாக இருக்காது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் இன்று (04.06.2025), மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில்ஆர்வமுடன் பயின்று 2024-25ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்துரையாடி, தொழிற்கல்விப் படிப்புகள், கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகள், தொழில்நுட்பக் கல்வி, தொழிற்பயிற்சி கல்வி படிப்புகள், கல்லூரிகள் தேர்வு, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது: மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைகளையெல்லாம் நன்கு அறிந்து ஆர்வமுடன் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள். இந்த காலகட்டம்தான் உங்களுடைய வாழ்க்கை தீர்மானிக்கக்கூடிய காலகட்டமாகும். மாணவர்கள் ஒவ்வொருவரும் மிகச் சரியான பாதையினை தேர்ந்தெடுத்து, படிக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சாதிப்பதற்கு குறைபாடு ஒருபோதும் தடையாக இருக்காது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் மனம்தளராமல் உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். குறைவான கல்விக் கட்டணத்தில் தரமான கல்வி எங்கு கிடைக்கிறது என்பதை முழுமையாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். நீங்களெல்லாம் ஆகச்சிறந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளீர்கள். ஆகையால், அரசு கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், ஐ.டி.ஐ போன்றவற்றில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். அதுமட்டும்மல்லாமல், ஒரு சில மாணவர்கள் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகள் படிப்பதற்கு தகுதியாகவுள்ளீர்கள். உங்களுடைய குடும்ப பொருளாதார சூழ்நிலையை கருத்திற்கொண்டும், ஒவ்வொரு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டும் மாணவர்கள் கல்வி கற்பதற்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முழுமுயிற்சி எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே, ஒவ்வொரு மாணவர்களும் தங்களது மதிப்பெண்களுக்கு ஏற்றார்போல் பாடப்பிரிவுகளை தேர்வுசெய்து, உயர்கல்வியில் நன்கு பயின்று வாழ்க்கையில் வெற்றி பெற்று, யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாமல் சுயமாக வாழ வேண்டும் என அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், வழிகாட்டி ஆசிரியர்கள், மாணவ - மாணவியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துக்கள்