12-ம் வகுப்பு மறுமதிப்பீடு முடிவுகள் தேதி அறிவிப்பு;
தமிழ்நாட்டில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி படிப்பின் மிக முக்கிய தேர்வாக இருக்கும் இத்தேர்வை இந்தாண்டு 12-ம் வகுப்பில் மட்டும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதற்கான முடிவுகள் கடந்த மே 8-ம் தேதி வெளியானது. இதில் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த முடிவுகளின் திருப்தி அடையாதவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2023-24 கல்வி ஆண்டில் 7,92,492 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதிய நிலையில், 3,73,178 பேர் தேர்ச்சி பெற்றனர். அதவது இது 95.03% தேர்ச்சி ஆகும். இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.47% அதிக தேர்ச்சி ஆகும். ஒவ்வொரு ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் என்பது கணிசமாக உயர்ந்துகொண்டே வருகிறது. பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியான நிலையில், இந்தாண்டு மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் வழிமுறைகளின் மாற்றம் கொண்டு வரப்பட்டது.மாணவர்கள் ஆன்லைன் வழியாகவே விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க மே 13 முதல் 17 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கு கட்டணமாக ரூ.275 பெறப்பட்டது. விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள்கள் அரசு தேர்வுகள் துறையின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், மாணவர்கள் ஜூன் 4-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இதற்கான முடிவுகள் ஜூன் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டல் (Retotal) மற்றும் மறுமதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்த மாணவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்களின் பட்டியல் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறாத பதிவெண்களின் விடைத்தாள்களில் மதிப்பெண் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்வது எப்படி?
பட்டியலில் இடம்பெற்ற பதிவெண்கள் கொண்ட மாணவர்கள் மட்டும் புதிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேல் குற்ப்பிட்டுள்ள அதே இணையதளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதன் மூலம் புதிய மதிப்பெண்களை மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும்.
படி 1 : மேல் குறிப்பிட்டுள்ள தேர்வு துறையின் இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : Notification பகுதியில் Statement of Marks என வெளியிடப்படுவதை கிளிக் செய்யவும்.
படி 3 : அதில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
படி 4 : மாணவர்களுக்கான புதிய மதிப்பெண்கள் அடங்கிய பட்டியல் திரையில் தெரியும்.
படி 5 : அதில் மாணவர்கள் ரிசல்ட் என்னவென்று அறிந்துகொள்ளலாம். மேலும் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
அசல் சான்றிதழ் எப்போது?
12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு, உயர்கல்வி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அசல் சான்றிதழ் வழங்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்துகாத்து கொண்டுள்ளனர். இந்நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். தனித்தேர்வர்கள் அவர்கள் எழுதிய தேர்வு மையத்தில் பெற்றுகொள்ளலாம்.
கருத்துக்கள்