advertisement

மாம்பழ விவசாயிகளை வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு - அன்புமணி கொந்தளிப்பு!

ஜூன் 23, 2025 8:52 முற்பகல் |

 

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகத்தில் மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ உழவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அவர்களிடமிருந்து 2.5 லட்சம் டன் மாம்பழங்களை கூட்டாக கொள்முதல் செய்யவும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4000 ஊக்கத் தொகை வழங்கவும் கர்நாடக அரசும், மத்திய அரசும் கூட்டாக முடிவு செய்திருக்கின்றன. கர்நாடக உழவர்களுக்கு பயனளிக்கக் கூடிய இந்த ஏற்பாடு வரவேற்கத்தக்கதாகும்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடிதம் எழுதியது உள்ளிட்ட பல வழிகளில் அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சரும், கர்நாடக வேளாண் துறை சாலுவராயசாமியும் நடத்தியப் பேச்சுகளில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக மாநில மாம்பழ வளர்ச்சி மற்றும் வாணிபக் கழகம் மூலம் மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான கர்நாடக உழவர்கள் பயனடைவார்கள்.

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள கர்நாடக உழவர்கள் மாம்பழ விலை வீழ்ச்சியில் இருந்து ஓரளவு விடுபட்டு மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் மாம்பழ விவசாயிகள் கண்ணீர் கடலில் மிதக்கின்றனர். அவர்கள் விளைவித்த மாம்பழங்களை வாங்க ஆளில்லாததால் ஏரிகளில் மீன்களுக்கு உணவாகவும், சாலையோரங்களிலும் கொட்டப்படும் அவலம் தொடர்கிறது. இதை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உழவர்களுக்கு துரோகம் மட்டுமே பரிசாகக் கிடைத்துள்ளது. மாம்பழங்கள் கட்டுபடியாகும் விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்; இது தொடர்பாக உழவர்கள் மற்றும் மாம்பழக் கூழ் ஆலை அதிபர்களை அழைத்து முத்தரப்புப் பேச்சுகளை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று கடந்த 4-ஆம் தேதியே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், உழவர்கள் நலன் காக்க தமிழக அரசு எதுவும் செய்யவில்லை.

தமிழகத்தில் இதுவரை 40% அளவுக்கு மட்டுமே மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள மாம்பழங்களும் அறுவடை செய்யப்பட்டால் நிலைமை மேலும் மோசமாகி விடும். எனது தமிழக அரசு இனியும் துரோகத்தைத் தொடராமல் அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்கள் மாம்பழக் கூழ் ஆலைகளால் கொள்முதல் செய்யப்படுவதையும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே அறுவடை செய்து பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தது ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement