advertisement

இந்து முன்னணி மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடு - அமைச்சர் ரகுபதி விமர்சனம்

ஜூன் 23, 2025 7:14 முற்பகல் |

இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது என்று அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்தார்.

இந்து முன்னணி சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று (ஜூன் 22) நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், இந்து முன்னணி நிர்வாகிகள், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு திராவிடத்துக்கு எதிராக நடத்தி உள்ளனர். இந்தியாவில் இந்துக்கள் அதிகம். ஆனால், சிறுபான்மையினருக்குதான் பாதுகாப்பு அவசியம், எந்த இந்துக்களை இங்கு வாழ விடவில்லை என்று ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யான் கூறினார். அதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது.

அண்ணாமலை வசனங்களை தான் உச்சரித்தாரே தவிற தமிழக மக்களின் மனநிலையை உச்சரிக்கவில்லை. இதுவரை ராமர் என்று கோஷம் போட்டவர்களை முருகன் என்று கோஷம் போட வைத்ததுள்ளது திமுக அரசு. யார் வேஷம் போடுகிறார்கள், யார் உண்மையானர்கள் என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம், அயோத்தியில் பாஜக எவ்வளோ தேர்தல் வேலைகளை பார்த்தது. ஆனால், அங்கு பாஜக தோல்வி அடைந்தது. அங்கு வென்றது இண்டியா கூட்டணி தான். முருக பக்தர்கள் மாநாடு என்று சொல்லிவிட்டு அங்கு வந்த பக்தர்களை அரசியல் நோக்கில் இழுப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இது முழுக்க முழுக நீதிமன்ற அவமதிப்பு ஆகும். இதில், நீதித்துறை நேர்மையாக செயல்பட்டு தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்யும் என்றார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement