நெல்லையில் காவலருக்கு அரிவாள் வெட்டு
நெல்லையில் காவலருக்கே அரிவாள் வெட்டு விழுந்ததால் நெல்லை மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரஹ்மத்துல்லா. இவர் ம காவலராக பணி புரிந்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், அவர் குடும்பத்துடன் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்திற்குப் பொழுதுபோக்க வந்துள்ளார்.
வ.உ.சி மைதானத்தைச் சுற்றி பூங்கா, துரித உணவு தின்பண்ட கடைகள் உள்ளன. அதனால், வார விடுமுறைகளில் மக்கள் கூட்டமாக அந்தப் பகுதிக்கு வருகை தருவது வழக்கம். அந்த வகையில், முகமது ரஹ்மத்துல்லா தனது குடும்பத்துடன் மைதானத்தில் இருந்து பூங்காவிற்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, பூங்காவின் முகப்பிற்கு அருகே இளைஞர்கள் கும்பலாக நின்று சண்டையிட்டு கொண்டிருந்துள்ளனர். இதனால், அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதைப் பார்த்த முகமது ரஹ்மத்துல்லா சண்டையிட்டுக் கொண்டிருந்த இளைஞர்களை விலக்கி விட்டதாக தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த இளைஞர்களுள் ஒருவர், சட்டென அரிவாளை எடுத்து காவலரை சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் படுகாயமடைந்த காவலர், கையில் ரத்த வெள்ளத்தில் தரையில் சரிந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், காவலரை உடனடியாக மீட்டு அருகில் இருந்த நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து. தப்பியோடிய நபர்கள் யார்? ஏன் காவலரை அரிவாளால் தாக்கினர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்