ஆந்திரா - பேராசிரியரை கத்தியால் குத்திய எம்.டெக். மாணவர்
கல்லூரி பேராசிரியரை அதே கல்லூரி எம்.டெக். மாணவர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்தவர் விநாயக புருசோத்தமன். இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.டெக். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சரிவர கல்லூரிக்கு செல்வதில்லை என்று கூறப்படுகிறது. தற்போது கல்லூரியில் தேர்வு நடந்து வருகிறது. வருகைப்பதிவு குறைவாக இருப்பதை காரணம் காட்டி மாணவர் விநாயக புருசோத்தமன் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படவில்லை என தெரிகிறது.
இதற்கிடையே சில தினங்களுக்கு தேர்வு நடந்தது. தேர்வு அறையில் கோபால்ராஜ் என்ற பேராசிரியர் பணியில் இருந்தார். அந்த சமயத்தில் மாணவர் விநாயக புருசோத்தமன் தேர்வு எழுத வந்தார். அவரை தடுத்து நிறுத்திய கோபால்ராஜ், கல்லூரி துறைத்தலைவரை பார்த்துவிட்டு வந்து தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தினார். ஆனால் மாணவர் அவரது பேச்சை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தேர்வு மையத்துக்குள் நுழைவதிலேயே குறியாக இருந்தார். எனவே பேராசிரியர் காவலாளியை அழைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த விநாயக புருசோத்தமன், மறைத்து வைத்திருந்த 2 கத்தியை எடுத்து பேராசிரியரை குத்தினார்.
உடனே அங்கிருந்த மற்ற மாணவர்கள், விநாயக புருசோத்தமனை கையும் களவுமாக பிடித்து அவரது கால்களையும், கைகளையும் கட்டி வைத்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். காயம் அடைந்த பேராசிரியருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருத்துக்கள்