எனது பிரசாரத்துக்கு பல்வேறு இடையூறு; திமுக மீது விஜய் குற்றச்சாட்டு
மின் தடை செய்தும், ஸ்பீக்கர் வயரை துண்டித்தும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் பிரசாரத்துக்கு திமுக இடையூறு செய்வதாக நாகையில் பிரசாரத்தில் ஈடுபட்ட தவெக தலைவரும், நடிகருமான விஜய் குற்றம் சாட்டினார்.தமிழகத்தில், 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, வாரம்தோறும் சனிக்கிழமைகளில், பிரசாரம் செய்ய நடிகரும், தவெக தலைவருமான விஜய் திட்டமிட்டுள்ளார்.
செப்., 13ம் தேதி திருச்சி, பெரம்பலுார் மாவட்டங்களில், அவர் பிரசாரம் செய்தார். அந்த வகையில், இன்று (செப் 20) நாகையில் தேர்தல் பிரசாரம் செய்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புத்தூரில் விஜய் பேசியதாவது:
இப்பொழுது நான் எந்த மண்ணில் நின்று கொண்டு இருக்கிறேன் தெரியுமா? நாகூர் ஆண்டவர் அன்போடு, மாரியம்மன், வேளாங்கண்ணி ஆசியோடு எனது மனதிற்கு ரொம்ப நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணில் இருந்து பேசுகிறேன்.உங்கள் அனைவருக்கும் என்றைக்கும் ஒரு மீனவ நண்பனாக இருக்கிற இந்த விஜய்யோட அன்பு வணக்கங்கள்.இந்த கப்பல் இருந்து வந்து இருக்கும் பொருட்களை எல்லாம் விற்பனை செய்வதற்கு அந்த காலத்தில் அந்தி கடைகள் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். உழைக்கிற மக்கள் இருக்கும் இடம் தான் நாகப்பட்டினம்.
மத வேறுபாடுகள் இல்லாத, மதசார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் உங்களுக்கு மீண்டும் வணக்கங்கள். தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் 2ம் இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் ஹார்பர் தான். ஆனால் அங்கு நவீன வசதிகள் கூடிய மீன்கள் பதப்படுத்தும் வசதி இல்லை. ரொம்ப அதிகமாக குடிசைப்பகுதிகள் இருக்கும் இடம் தான் நாகப்பட்டினம். இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதையும் மதுரை மாநாட்டில் பேசி இருந்தேன். அது தவறா? மீனவர்களுக்கு குரல் கொடுப்பது நமது கடமை. 14 ஆண்டுகளுக்கு முன் நாகப்பட்டினத்தில் பொதுக்கூட்டம் நடத்தினேன்.
இந்த விஜய் களத்திற்கு வருவது ஒன்று புதுசு இல்லை கண்ணா, முன்னாடி விஜய் மக்கள் இயக்கம் என்று வந்து நிற்போம். இப்பொழுது தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கமாக வந்து நிற்கிறோம். அவ்வளவு தான் வித்தியாசம். இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
மீனவர்கள் உயிர் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு ஈழத் தமிழர்களின் கனவுகளும், வாழ்க்கையும் நமக்கு முக்கியம். மீனவர்கள் கஷ்டத்தை பார்த்து ஒரு கடிதம் எழுதிவிட்டு கப்சிப் என்று போவதற்கு நாம் கபட நாடக திமுக அரசு கிடையாது.
சிஎம் சார் மனதை தொட்டு சொல்லுங்கள் வெளிநாட்டு முதலீடா? அல்லது வெளிநாட்டில் முதலீடா?
ஒட்டுமொத்த தமிழகத்துக்கான முதலீடா? உங்கள் குடும்பத்தோட முதலீடு வெளிநாட்டிற்கு போகுதா? நாகையில் உபிரசாரத்துக்கு எத்தனை இடையூறுகள்? அஞ்சு நிமிஷம் தான் பேசணும்; பத்து நிமிஷம் தான் பேசணும் என்று. நான் பேசுவதே 3 நிமிடம். அதில் அதனை பேசக் கூடாது என்றால் நான் எதை தான் பேசுவேன்? பிரதமர் வந்தால் இத்தனை கட்டுப்பாடுகள் இருக்குமா? பிரசாரம் சென்றால் மின்தடை செய்கின்றனர். ஸ்பீக்கர் வயரைக் கட் பண்ணுறாங்க, மக்களைப் பார்த்து சிரிக்கக்கூடாது, மக்களைப் பார்த்து கையசைக்கக்கூடாது எனக் கட்டுப்பாடுகள்; எங்களுக்கு மட்டும் அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். செம்ம காமெடியாக இருக்கிறது.
நேரடியாகவே கேட்கிறேன் சிஎம் சார், மிரட்டி பார்க்கிறீர்களா? முதல்வர் அவர்களே,என்ன செய்து விடுவீர்கள்? குடும்பத்தை வைத்து கொள்ளை அடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்? நான் தனி ஆள் இல்லை, மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி. பெண்கள் சக்தியின் பிரதிநிதி சார்.நமக்கு தடையாக போடும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? உங்கள் நல்லதுக்காக தவெக ஆட்சி அமைய வேண்டுமா?
இந்த போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்க விடாது. மன உறுதியுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம். இவ்வாறு விஜய் பேசினார்.
கருத்துக்கள்