advertisement

நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் மார்தட்டுகிறார் - இபிஎஸ் கண்டனம்

மே 30, 2025 7:38 முற்பகல் |


 
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான ''எடப்பாடி பழனிசாமி'' ள் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது,"கொலைக் குற்றச் சம்பவங்களில், வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று போலி குற்றவாளிகளைக் கைது செய்யும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம்!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆங்காங்கே உள்ள காவல் துறையினர் அரும்பாடுபட்டு உண்மைக் குற்றவாளிகளைப் பிடிப்பது சகஜமான ஒன்றாகும். ஆனால் தமிழ்நாட்டில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், கொலைக் குற்ற வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உண்மைக் குற்றவாளிகளை தப்பவிட்டுவிட்டு, அவசர கதியில் குற்றங்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் போக்கு நடைபெற்று வருவது கொடூரத்தின் உச்சமாகும்.


முதியவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.கடந்த ஏப்ரல் மாதம் ஈரோடு மாவட்டம், சிவகிரியில் வயதான தம்பதிகள் படுகொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தொடர்ந்து, சிவகிரி சம்பவத்தில் கொலையாளிகள் 3 பேரையும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கியதாக ஒருவரையும் காவல்துறை கைது செய்ததாக, இவ்வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி தெரிவித்ததாகச் செய்திகள் கூறுகின்றன.

மேலும், கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும் ஏற்கெனவே, கடந்த பல ஆண்டுகளாக ஆங்காங்கே நடைபெற்ற 12 குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், அதில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும் செய்திகள் வந்துள்ளன.குற்றவாளிகள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் 12 சம்பவங்களில், 2022-ல் சென்னிமலையில் உப்பிலிபாளையம் தோட்ட வீட்டில் வசித்த வயதான தம்பதி துரைசாமி-ஜெயமணி ஆகியோரையும்; 2023-ல் சென்னிமலை ஒட்டன்குட்டை களியாங்காட்டுதோட்டத்தில் வசித்த முத்துசாமி-–சாமியாத்தாள் தம்பதிகள் ஆகியோரையும் தாக்கிக் கொன்று கொள்ளையடித்த சம்பவம் மற்றும் 2024 நவம்பர் மாதம் திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையம் தோட்ட வீட்டில் இருந்த தெய்வசிகாமணி-அலமேலு தம்பதியினரும், அவரது மகன் செந்தில்குமார் ஆகிய மூவரையும் இந்த கும்பல் கொலை செய்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

மேலும், இதுபோன்ற செயல்களினால் இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்போது உண்மைக் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்தும், தண்டனையில் இருந்தும் தப்பிக்க வழிவகை ஏற்படும்.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், உண்மைக் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை என்று அவரது மனைவியே கூறும் நிலையில், திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாத நிலையில், திருச்சி அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சி.பி.ஐ.-யிடமிருந்து இந்த விடியா ஆட்சியாளர்கள் தங்கள் கைகளில் எடுத்து ஒருசில ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளை நெருங்கக்கூட முடியாத நிலையில், 'எங்கள் ஆட்சியில் காவல் துறையினர் குற்றங்களை விரைந்து விசாரித்து உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருகிறோம்' என்று நிர்வாகத் திறமையற்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின் மார்தட்டிக்கொள்வது, `கேப்பையில் நெய் வடிகிறது' என்பது போலத்தான்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலரும்போது வெளிக்கொண்டுவரப்படும். திமுக ஆட்சியாளர்களின் கைக்காட்டுதலுக்கு அடிபணிந்து தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement