ஆம்பூர் அருகே காதலன் தற்கொலை செய்து கொண்டதால் காதலி விபரீத முடிவு
காதலன் தற்கொலை செய்து கொண்ட விரக்தியில், 8 மாத கர்ப்பமாக இருந்த கல்லூரி மாணவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நித்திலன் ராகுல். இவர் பெங்களூருவில் உள்ள நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், அதே கல்லூரியில் பயின்ற ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாணவியை, நித்திலன் ராகுல் காதலித்து ந்துள்ளார்.
இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், மாணவி 8 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். அதனைக் கண்ட கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். ஆகையால், நித்திலன் ராகுல் பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு, மாணவி வாணியம்பாடியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கும் சென்றுள்ளனர்.கடும் மனஉளைச்சலில் இருந்த நித்திலன் ராகுல் தனது செல்போன் உள்ளிட்ட அனைத்து உடமைகளையும் வீட்டிலேயே வைத்துவிட்டு, நேற்று இரவு பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
மாணவனின் உடலை மீட்ட போலீசார், அவரது குடும்பத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதற்கிடையே, இன்று காலையில் நித்திலன் ராகுல் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த மாணவியும், வாணியம்பாடி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த விபரீத முடிவில், மாணவி வயிற்றில் இருந்த 8 மாத சிசுவும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அதனை கண்ட அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்கள்