advertisement

சொத்துக்காக தாயை வீட்டை விட்டு விரட்டிய வாரிசுகள் - ஆட்சியர் அலுவலகத்தில் பெண் கண்ணீர் புகார்

ஜூன் 02, 2025 9:54 முற்பகல் |

 

சாத்தான்குளத்தில் சொத்துக்காக தாயை வீட்டை விட்டு வாரிசுகள் விரட்டி விட்டதாகவும் தான் நிர்கதியாக நிற்பதாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியினை சேர்ந்த காலஞ்சென்ற சந்திரராஜ் என்பவர் மனைவி ஜெயந்தி (62) என்பவர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில்,எனது கணவர் இறந்து விட்ட நிலையில் வாரிசுகளாக, நானும், எனது மகள் சண்முகசுந்தரி, மகன் சரவணராஜா, மகன் ஜெயதீபன், மகள் திவ்யா ஆகிய 5 பேர் ஆவோம். எனது கணவர் விருப்புறுதி ஆவணம் எதுவும் எழுதி வைக்காமல் காலம் சென்று விட்டார். எனது மூத்த மகன் சரவணராஜா வருமானவரித்துறையில் உயர்ந்த பதவியில் பணிபுரிந்து வருகிறார். இளையமகன் ஜெயதீபன் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். எனது கணவர் இறந்த பின்பு எனது 2 மகன்களும் அவர்கள் வசிக்கும் பதவி அதிகாரத்தில் என்னை மிரட்டி, என் பெயரில் உள்ள சொத்துக்களை எழுதி வாங்கவும், எனது கணவர் பெயரில் உள்ள சொத்துக்களில் எனக்குரிய பங்கை எழுதிக் கேட்டும், பல்வேறு வகையில் இடையூறுகளை  இன்றுவரை கொடுத்து கொடுமைப்படுத்தி வருகிறார்கள். மேலும் சாெத்துக்காக என்னை வீட்டை விட்டு அனுப்பி விட்டார்கள்.

என்னுடைய கணவர் பெயரில் உள்ள சொத்துக்களில் இருந்து வரும் வருமானத்தையும் எனது இரண்டு மகன்களுமே வசூல் செய்தும் வருகிறார்கள். மேற்படி எனது இரண்டு மகன்களாலும் அவர்களுடைய மனைவிகளாலும் என் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து நேரிடலாம். எனது மூத்த மகன் சரவணராஜாவின் நண்பர், போதை பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.அதை வைத்தும் என்னை மிரட்டி வருகிறார்கள். முதியவளாகிய நான் தங்குவதற்கு இடம் இல்லாமல் என்னை நிர்கதியாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கியும், நான் வாழ்ந்து வந்த வீட்டில் எனது தங்குவதற்கு வழிவகை செய்தும், மேற்படி நபர்கள் மீது மூத்த குடிமக்கள் சட்டப்படியும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குடும்ப பாதுகாப்பு சட்டப்படியும் நடவடிக்கை எடுத்து நீதி வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என மனுவில் தெரிவித்துள்ளார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement