போக்குவரத்து விதிமீறல் - இந்தியாவில் ஒரே ஆண்டில் ரூ.12 கோடி அபராதம் விதிப்பு!
இந்தியாவில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 8 கோடி செல்லான்கள் விநியோகிக்கப்பட்டு, ரூ.12 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோர் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வில்லை என்று தெரிகிறது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில், 75 சதவீதம் செலுத்தப்படவில்லை என்பது கார்ஸ்-24 என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.12,000 கோடிக்கு அபராதம் விதிக்கப்பட்டதில் ரூ.3,000 கோடி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.
இந்த அபராதத் தொகையை பார்க்கும் போது சாலைகளில் வாகன ஓட்டிகள் போக்கவரத்து விதிகளை மதிக்காமல் எத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. விதிமீறல்களால் நிகழும் விபத்துகள், இழப்புகள் போன்றவற்றையும் உற்று நோக்க வேண்டியது உள்ளது.
இதில், சாலைகளில் போக்குவரத்து காவல் துறையினர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விதிகளை கடைப்பிடித்து 43.9% பேர் வாகனங்களை ஓட்டுவதாகவும், 31.2% பேர் காவல் துறையினர் இருக்கின்றனரா என்பதை கவனித்து வாகனங்களை இயக்குவதாகவும், 17.6% பேர் காவல் துறையினர் இருப்பதைக் கவனித்து, அதன்மூலம் அபராதங்களை தவிர்த்துக் கொண்டதாக கார்ஸ்-24 நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சிக்னல்களில் ஏஎன்பிஆர் கேமராக்கள் இருந்தாலும், அது குறித்து கவலை கொள்ளாமல் வாகனங்களை ஓட்டுவதாக 47 சதவீதம் பேரும், கேமராக்களை பார்த்ததும் வேகத்தைக் குறைத்து வாகனத்தை இயக்குவதாக 36.8 சதவீதம் பேரும், நெடுஞ்சாலைகளில் வேகத்தை கணக்கிடும் கேமராக்கள் உள்ள இடங்களில் மட்டும் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் செல்வதாக 15.3 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிக வேகத்தில் வாகனத்தை இயக்குதலே போக்குவரத்து விதிமீறல்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் கார்களை இயக்குவது, போக்குவரத்துக்கு தடையாக வாகனங்களை நிறுத்துவது, சிக்னல்களை மதிக்காமல், பச்சை நிற விளக்குகள் ஒளிரும் முன்பாகவோ, சிவப்பு விளக்குகள் ஒளிர்ந்த பின்னரும் கடந்து செல்வது, எதிர் திசையில் வாகனத்தை இயக்குவது ஆகியவை விதிமீறல்களில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
அதே நேரத்தில், தானியங்கி நவீன கேமராக்களின் துணையுடன் விதிமீறல்கள் தொடர்பாக விநியோகிக்கப்பட்ட அபராத நோட்டீஸ்களிலும் பல குளறுபடிகள் நிகழ்ந்து வருகின்றன. பெங்களூரில் இரு சக்கர வாகன ஓட்நருக்கு 475 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக மொத்தம் ரூ.2.91 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவரது செல்போனுக்கு மெசேஜ் வந்தது. ஹரியாணா மாநிலத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் 18 டன் சரக்குகளை ஏற்றியதாக ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது.
இந்த அபராதங்களை இணையவழியில் செலுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அது குறித்து யாரும் பெரிதாக கவலை கொள்வதில்லை. ஆட்டோ, வாடகை கார் போன்ற வாகனங்கள் ஆண்டாய்வுக்கு உள்படுத்தப்படும்போது, அபராதங்கள் நிலுவையில் இருந்தால் அதற்கான தகுதிச் சான்று வழங்கப்படாது. இதனால் தான், அவர்கள் போக்குவரத்து அபராதங்களை செலுத்தும் நிலை அதிகரித்து வருகிறது. பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை விற்கும் போது, அதை வாங்குவோர் நிலுவை அபராதங்கள் உள்ளனவா என சரிபார்க்கும் போது தான் அபராதம் செலுத்துகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் வாகன ஓட்டிகளின் விதிமீறல்களை கேமராக்கள் மூலம் பதிவு செய்து, 25 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. தற்போது, சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் நிகழ்ந்து வருகிறது. சாலையில் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போதே பைக், ஆட்டோ, கார் ஆகிய வாகனங்கள் போக்குவர்தது சிக்னலை மதிக்காமல் சென்று வருகிறது.
இதில், குறிப்பாக அரசுப் பேருந்துகளும் அடங்கும், சிகப்பு விளக்கு முடிந்து பச்சை விளக்கு எரிவதற்குள் வாகனங்கள் சிக்னலை கடந்து செல்கிறது. இதேபோல, பச்சை விளக்கு முடிந்து சிகப்பு விளக்கு எரிய ஆரம்பிக்கும் போதும் வாகனங்கள் ஆபத்தான முறையில் சிக்னலை கடந்து செல்கின்றன. இதனால், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. சில இடங்களில் விபத்தும் நிகழ்ந்துள்ளது.
கருத்துக்கள்