என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது - கமல்ஹாசன்
Thug Life படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நடிகர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என கமல்ஹாசன் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில் தற்போது அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், 'Thug Life' ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் பேசிய ஒரு கருத்து, ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தின்மீது, குறிப்பாக சிவராஜ்குமாரிடம் கொண்ட உண்மையான பாசத்தால் வந்தது. ஆனால், அந்த உரை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சூழ்நிலையில் பொருத்தமில்லாத வகையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அறிந்து மனவேதனையடைகிறேன்.
என் வார்த்தைகள், நம்மை எல்லோரும் ஒரே குடும்பத்தினரே என்பதையும், நாம் ஒன்றுபட்டவர்களாக இருக்கிறோம் என்பதையும் வலியுறுத்துவதற்காகவே கூறப்பட்டது. அது எந்த விதமாகவும் கன்னட மொழியை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அல்ல. கன்னட மொழியின் வளமான மரபு குறித்து எந்தவொரு வாதமும் இல்லை, இருக்கும் இடமுமே இல்லை.
தமிழ் போலவே, கன்னடத்துக்கும் பெருமைமிகுந்த இலக்கியமும் கலாச்சார மரபும் உண்டு. இதனை நான் நீண்ட நாட்களாக மதித்து வருகிறேன். என் திரைப்பட வாழ்க்கை முழுவதும், கன்னடப் பேசும் மக்களிடம் இருந்து நான் பெற்ற அன்பையும், அளித்த ஆதரவும் நான் மிகுந்த நன்றியுடன் நினைக்கிறேன். இதை நான் என் மனசாட்சியுடனும் உறுதியுடனும் கூறுகிறேன்: எனக்குள்ள கன்னட மொழிக்கான அன்பு உண்மையானது. கன்னட மக்களின் தாய்மொழிப் பற்றை நான் மிக்க மரியாதையுடன் பாராட்டுகிறேன்.இந்த அன்பும் உறவும்தான் எனக்கு என் முன்னோர்கள் கற்றுத் தந்தார்கள் - அதைத்தான் நான் பகிர விரைந்தேன். இந்தப் பாசத்தின் விளைவாகத்தான் சிவன்னா (சிவராஜ்குமார்) அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். இந்தக் கருத்து விவகாரத்தால் அவருக்கு ஏற்பட்டு இருக்கும் சங்கடத்திற்கு நான் வருந்துகிறேன். ஆனால், நாங்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள உண்மையான அன்பும் மரியாதையும் இதன் பின் மேலும் வலிமையாகத்தான் அமையும் என நான் நம்புகிறேன்.
சினிமா என்பது மக்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவர்களாக இல்லை. என் வார்த்தைகள் நான் கொண்டிருந்த உண்மையான நோக்கத்தோடு உணரப்படட்டும் என நான் மனமார நம்புகிறேன். கர்நாடகம், அதன் மக்கள் மற்றும் அவர்களது மொழிக்கான எனது நிலையான பாசமும் மரியாதையும், அதன் உண்மை அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என உளமார விரும்புகிறேன். இந்தத் தவறான புரிதல் தற்காலிகமானதுதான் என்றும், நாம் ஒருவரையொருவர் காணும் அன்பும் மரியாதையும் மீண்டும் வலியுறுத்தும் ஒரு வாய்ப்பாக இது அமையும் என்றும் நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்