இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி
மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் 18 பயனாளிகளுக்கு ரூ.3.35 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த 321 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, தனி நபர் வீடு வழங்குதல் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்ததாவது : ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் 08 பயனாளிகளுக்கு ரூ.2, 72, 400 /= மதிப்பீட்டில் நிவாரண உதவித் தொகைகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 05 பயனாளிகளுக்கு தலா ரூ.6,700 /= வீதம் விலையில்லா தேய்ப்பு பெட்டிகளும், 05 பயனாளிகளுக்கு தலா ரூ.5,800 /= வீதம் விலையில்லா தையல் இயந்திரங்களும் என மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ.3, 34,900 /= மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.தருண் தமிழ்நாடு அரசு சார்பில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா கடற்கரையில் மல்லர் கம்பம் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடம் பெற்றதையொட்டி மாணவர் எஸ். தருண் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, சமூக பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மாரிமுத்து, மாவட்ட விளையாடு அலுவலர் தினேஷ்குமார், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்