தூத்துக்குடி மாவட்ட இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை:
தூத்துக்குடி மாவட்ட இசைப்பள்ளியில் 2025 -2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது கலை ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட இசைப்பள்ளியில் 2025 -2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ மாணவியர் சேர்க்கை மே 5ஆம் தேதி முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பள்ளியில் சேர்வதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதஸ்வரம், தேவாரம் ஆகிய கலைகளுக்கு எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இசைப்பள்ளி படிப்பின் கால அளவு 3 ஆண்டுகள் ஆகும். இப்பள்ளியில் பயிலுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதம் தோறும் ரூபாய் 400/- உதவித்தொகை வழங்கப்படும்.
அனைத்து மாணவ மாணவிகளுக்கு அரசு விடுதி வசதியும் செய்து தரப்படும் வெளியிடங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படும். மூன்று ஆண்டுகள் பயின்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதஸ்வரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோயில்களில் பணிபுரியவும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.
ஆகவே, கலை ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தலைமை ஆசிரியை, T- சவேரியார்புரம், சிலுவைபட்டி அஞ்சல், தூத்துக்குடி- 2 என்ற முகவரியிலும், 9487739296 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்
கருத்துக்கள்