அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மாணவி அளித்த புகாரில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்தது.
கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை 9ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் இந்த வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மீது மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டது.
பின்னர், இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு கடந்த மார்ச் 7ஆம் தேதி மாற்றப்பட்டது. அப்போது, தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை எனவும், ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் ஞானசேகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் பலாத்கார வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது . சிறப்பு விசாரணை குழு அறிக்கையை ஏற்று இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி தண்டனை விவரத்தை ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.குற்றவாளி ஞானசேகரன் மீது 11 பிரிவுகளில் குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில் 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பின்றி ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும், ரூ .90,000 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக குற்றவாளிகள் சிறையில் இருக்கும்போது அவர்களது நன்னடத்தை ஆகியவற்றை கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்ட தண்டனை காலம் குறைக்கப்பட்டு அவர்கள் விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த வழக்கில், 30 ஆண்டுகாலம் கட்டாயம் சிறை வாழ்க்கை அனுபவிக்க வேண்டும் என்ற அதிரடி தீர்ப்பை நிதிமன்றம் வழங்கியுள்ளது.
கருத்துக்கள்