தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலை ராட்சத குழாயில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு !
தூத்துக்குடியில் கோயிலுக்கு தீர்த்தம் எடுக்கச் சென்ற சிறுவன் ராட்சத குழாயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் திருவிழாவிற்கு தீர்த்தம் எடுப்பதற்காக, தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள முக்காணி ஆற்றுப்பாலத்திற்கு சென்ற சிறுவன், தனியார் தொழிற்சாலைக்கு தண்ணீர் எடுக்கும் ராட்சத குழாயில் சிக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசல் கிராமத்தில் ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் வருஷாபிஷேகம் நாளை (ஜூன் 1) நடைபெறவுள்ளது. இதற்காக தீர்த்தம் எடுப்பதற்காக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர்.
இதில், முதலாவதாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சென்று தீர்த்தம் எடுத்தனர். தொடர்ந்து, தாமிரபரணி நதிநீரை எடுப்பதற்காக முக்காணி ஆற்றுப்பாலத்திற்கு சென்றனர். இதில், நீரை எடுப்பதற்காக குலையன் கரிசல் பகுதியைச் சேர்ந்த கோகுல், விக்னேஷ், ராஜேஷ், முத்துகிருஷ்ணன், சண்முகம், ராஜ்குமார் ஆகியோர் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இறங்கினர்.
இதில் தனியார் கெமிக்கல் தொழிற்சாலைக்காக தண்ணீர் உறிஞ்சும் ராட்சத குழாய் இருந்துள்ளது. இந்த சமயத்தில் ஆற்றில் இறங்கிய 17 வயது சிறுவன், ராட்சத குழாய்க்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துள்ளார். இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் 17 வயது சிறுவனை மீட்பதற்காக சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் ஆறுமுகநேரி போலீசார், சுமார் அரை மணி நேரம் போராடி கோகுலின் உடலை மீட்டனர். தொடர்ந்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்கள்