மதுரையில் முதல்வர் ஸ்டாலின் 'ரோடு ஷோ
மதுரை மாநகரமே குலுங்கும் வகையில் நடைபெற்ற பிரமாண்ட ரோடு ஷோவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். சுமார் 25 கிமீ தூரத்துக்கு கால்கடுக்க காத்திருந்த மக்கள் முதல்வருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர்.
மதுரை - மேலூர் சாலை, உத்தங்குடியில் நாளை (ஜூன் 1) திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் 3000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட சுமார் 5000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொதுக் குழுவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் மதுரை வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழக அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஐ.பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வரவேற்றனர். விமான நிலையம் அருகே இருக்கும் தனியார் விடுதியில் ஓய்வு எடுத்த பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணிக்கு சுமார் 20 கிமீ தூரத்திற்கு 25 கிமீ தூரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட ரோடு ஷோவில் கலந்து கொண்டார்.
பெருங்குடியில் தொடங்கிய ரோடு ஷோ அவனியாபுரம், வில்லாபுரம், ஜெய விலாஸ் சந்திப்பு, சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர், டிவிஎஸ் நகர், பழங்காநத்தம், பொன்மேனி, காளவாசல், குரு தியேட்டர், ஆரப்பாளையம், A.A.ரோடு, ஜெயில் சாலை வழியாக, ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் நிறைவடைகிறது.
பெருங்குடி முதல் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு வரை ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக கூடி நின்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். முடிவில், ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சியின் முதல் மேயர் முத்து சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோவை ஒட்டி 18 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையின் இரு பக்கங்களிலும், திமுக கொடி கட்டப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும், முதலமைச்சர் வருகையை ஒட்டி பல்வேறு இடங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
பிரமாண்ட ரோடு ஷோ முடிவடைந்ததும் நாளை (ஜூன் 1) காலை 9.30 மணிக்கு மதுரை உத்தங்குடியில் நடைபெற இருக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 2 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மதுரை வருவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கருத்துக்கள்