ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு: அரசு காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப கோரிக்கை!
தமிழகத்தில் ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர். இதனால், வேலைவாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றி வந்த 8,144 ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த மே 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றனர். இந்த ஆண்டில் ஒரே நாளில் ஓய்வு பெறுவோரில் இது அதிகமாகும். இதனால், அரசுப் பணிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், அவை பொதுமக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவதிலும் அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானது.
கடந்த மே மாதம் ஓய்வு பெற்றவர்கள் மொத்த ஊழியர்களில் ஒரு சதவீதத்துக்கும் (0.86) குறைவுதான் என்றாலும், இந்த நிதியாண்டில் தொடர்ந்து சுமார் 20,000 பேர் வரை ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் வயது முதிர்வை எட்டியதும் ஓய்வு பெறுவது நடைமுறைதான் என்றாலும், அமைப்புகளின் செயல்பாடுகள் தொடரவும், பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் தேவையான ஊழியர்கள் இருக்க வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் கடந்த ஏப்ரல் மாத இறுதி நிலவரப்படி 31.84 லட்சம் பேர். இவர்களில் 14.32 லட்சம் பேர் ஆண்கள், 17.52 லட்சம் பேர் பெண்கள். அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள் அதிகரித்து வருவது ஒரு புறம் என்றால், வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவது மறுபுறம். எனவே, காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகளை தேர்வாணையங்களும், தேர்வு வாரியங்களும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கருத்துக்கள்