போராட்டம் நடத்த அனுமதித்து விட்டு பின்னர் அனுமதி மறுப்பது ஏன்?..சீமான் கேள்வி!
முதலில் போராட்டம் நடத்த அனுமதித்த காவல்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்ட பிறகு, கூட்டம் நடப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு அனுமதி மறுப்பது எவ்வகையில் நியாயம்? என தமிழக அரசுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் கோவில் குடமுழுக்கை தாய்த்தமிழில் நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ் பேரவை இணைந்து வருகின்ற 14-06-2025 அன்று திருச்செந்தூரில் நடத்தவிருந்த அறப்போராட்டத்திற்கு தி.மு.க. அரசு அனுமதி மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
முதலில் போராட்டம் நடத்த அனுமதித்த காவல்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்ட பிறகு, கூட்டம் நடப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு அனுமதி மறுப்பது எவ்வகையில் நியாயம்? யாருக்குப் பயந்து, யாருடைய உத்தரவின் பேரில் காவல்துறை முதலில் வழங்கிய அனுமதியை தற்போது மறுக்கிறது? திருச்செந்தூர் காவல்துறை அதிகாரிகளின் இத்தகைய அறமற்றச்செயல், தி.மு.க. ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்குத் தரம்தாழ்ந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. வெட்கக்கேடு!
முத்தமிழ் முருகன் மாநாடு என்ற பெயரில் நாடகம் நடத்திய தி.மு.க. அரசு, தற்போது சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தி, பா.ஜ.க.வின் பீ டீமாக செயல்பட்டு, பிளவுவாத அரசியலுக்குத் துணைபோவது வெட்கக்கேடானது.
ஆகவே, ஐகோர்ட்டு உத்தரவைப் பின்பற்றி திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கை தமிழ்நாடு அரசு தாய்த்தமிழில் நடத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அறப்போராட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். அனுமதியளிக்க மறுக்கும் பட்சத்தில் தமிழ் மொழிக்காகத் தடையை மீறி கூட்டத்தை நடத்துவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்