கச்சத்தீவை மீட்பது எப்போது? - சீமான் கேள்வி
தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதை தடுக்க கச்சத்தீவை திரும்பப் பெற்று நிரந்தர தீர்வினை காண வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கற்பிட்டி கடற்பரப்பு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் நேற்று முன்தினம் (05.08.2025) கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற கடந்த 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை இனவெறி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல லட்சம் மதிப்பிலான அவர்களின் விசைப்படகுகளும் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கையாலாகாத்தனமே, தமிழ் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் இனவெறி அடக்குமுறைகள் தொடர்வதற்கான முதன்மைக் காரணமாகும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு 159 மீனவர்களும் - 19 படகுகளும், 2022-ம் ஆண்டு 237 மீனவர்களும் - 34 படகுகளும், 2023-ம் ஆண்டு 240 மீனவர்களும் - 35 படகுகளும், உச்சமாக 2024-ம் ஆண்டு 530 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, அவர்களின் 71 படகுகளும் பறிக்கப்பட்டன. நடப்பு 2025-ம் ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் 64 மீனவர்களும், பிப்ரவரி மாதம் 60 மீனவர்களும், மார்ச் மாதம் 14 மீனவர்களும், ஜூன் மாதம் 8 மீனவர்களும், ஜூலை மாதம் 25 மீனவர்களும் ஆக மொத்தம் 167 மீனவர்களும் அவர்களின் 24 படகுகளும் இலங்கை அரசால் பறிக்கப்பட்டுள்ளன. தற்போது ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1,300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது, மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும்.ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கையை இனியும் நட்பு நாடென கூறுவதை விடுத்து, தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதை தடுக்க கச்சத்தீவை திரும்பப் பெற்று நிரந்தர தீர்வினை காண வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் வழக்கம்போல கைது செய்யப்பட்ட தமிழ் மீனவர்களை மீட்க, மத்திய அரசிற்கு வெறும் கடிதம் மட்டுமே எழுதுவதை கைவிட்டு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள கச்சத்தீவு வழக்கினை விரைவுப்படுத்தி, ஐம்பதாண்டு காலமாய் கொடுத்து வரும் வாக்குறுதியை இனியாவது நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்