உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மதுரை வருகை- பலத்த பாதுகாப்பு எற்பாடு!
மதுரையில் நாளை நடைபெறும் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மதுரை வருகிறார்.அமித்ஷா வருகையையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜனதா கட்சி தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த முறை தமிழகம் வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அதிமுக உடனான கூட்டணியை ஏற்படுத்திவிட்டு சென்றார்.இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இன்று மதுரை வருகிறார்.டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று புறப்பட்டு, இரவு 8.30 மணி அளவில் மதுரை வரும் அவர் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்குகிறார்.
அதனை தொடர்ந்து நாளை பகல் 11 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேச இருக்கிறார். இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.
முன்னதாக இந்த கூட்டம் நடைபெறும் இடத்தில் மேடை அமைக்க பந்தக்கால் நடும் நிகழ்ச்சி . பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அமித்ஷா வருகையையொட்டி, பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை விமான நிலையத்தில் நடைபெற்றது.அப்போது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அமித்ஷா செல்ல இருப்பதால், அங்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசிக்கப்பட்டது.இதே போல் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் இடத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருத்துக்கள்