மதுரையில் பேருந்து ஓட்டுனரை செருப்பால் அடித்த உதவி மேலாளர் சஸ்பெண்ட்
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுனரை செருப்பால் அடித்த ஆரப்பாளையம் பேருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மே 7ம் தேதி பக்ரீத் விடுமுறையை மற்றும் வார இறுதி விடுமுறையை அடுத்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பினர்.தவிர, முகூர்த்த நாளாக இருந்ததால் கூட்டம் அலைமோதிய நிலையில் கடந்த 5 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 6 லட்சம் பேர் அரசுப் பேருந்தில் பயணம் செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் மதுரையில் இருந்து கோவை, திருப்பூர் சேலம் உள்ளிட்ட தொழில் நகரங்களுக்குத் திரும்ப நேற்று மாலை முதல் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.அதில் சிலர் பேருந்தில் நிலையத்திற்கு வரும் வழியிலேயே நின்றுகொண்டு பேருந்தில் ஏறி இடம்பிடித்து அமர்ந்துகொண்டனர். இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் ஏறமாற்றமடைந்தனர்.
அதேவேளையில், பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்து ஒன்றில் ஏறிய பயணிகள் ஓட்டுனரிடம் பேருந்தை எடுக்கச் சொல்ல அவர் நிலைய மேலாளர் சொன்னால் மட்டுமே பேருந்தை எடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து நிலைய மேலாளரை முற்றுகையிட்ட பயணிகள் பேருந்தை எடுக்கச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அந்த பேருந்து நிலைய உதவி மேலாளர் குறிப்பிட்ட பேருந்து ஓட்டுனர் கணேசனை தனது ஆபீஸ் ரூமுக்கு அழைத்துவர சக ஊழியர்களிடம் கூறினார்.
உதவி மேலாளரின் அழைப்பை அடுத்து தன் மீதான சார்ஜ் என்னவென்றே தெரியாமல் அங்கு வந்த ஓட்டுநர் கணேசனை தனது அறைக்கு சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்ற உதவி மேலாளர் மாரிமுத்து, ஓட்டுனரிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல் சட்டென்று தனது காலில் இருந்த செருப்பைக் கழற்றி ஓட்டுனரை அடித்தார்.
இதை சற்றும் எதிர்பாராத ஓட்டுநர் கணேசன் தன்னை உதவி மேலாளர் செருப்பால் அடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியேற முயன்ற நிலையில், உதவி மேலாளர் அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் அவர் வெளியே செல்வதை தடுத்ததோடு உதவி மேலாளருக்கு ஆதரவாக செயல்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் கணேசன் வெளியே ஓடிவந்து சக ஓட்டுநர்களிடம் தனக்கு நேர்ந்ததை கூறினார், அதேவேளையில் இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த பயணிகள் செல்போனில் வீடியோவாக பதிவான நிலையில் அது சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்த விவகாரம் தொடர்பாக உதவி மேலாளர் மாரிமுத்து மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கருத்துக்கள்