advertisement

ஒரு புதையலை புதைத்து விட்டோம்!" - கவிஞர் வைரமுத்து பதிவு

ஜூன் 12, 2026 5:13 முற்பகல் |

 

'இயக்குனர் இமயம்' என்று அழைக்கப்படும் பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். 

இறுதிச்சடங்குக்காக பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் பிரிவுக்கு பக்கத்தில் உள்ள காட்ரோட்டில் உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து பாரதிராஜாவின் இழப்பை தாங்கமுடியாமல் தனது எக்ஸ் தளத்தில் புதையலை புதைத்துவிட்டோம்! என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

பிறந்த மண்ணில்

அடக்கம் செய்யப்பட்டார்

பாரதிராஜா

83 ஆண்டுகளுக்கு முன்னே

தமிழர்கள் பெற்ற

ஒரு புதையலைக்

குழிதோண்டி மீண்டும்

புதைத்துவிட்டோம் பூமிக்குள்


மேற்குத்தொடர்ச்சி மலைகளே

கள்ளிக்காடே கரடே நதியே

பச்சைத் தாவரங்களே

பாடும் பறவைகளே

வைகை அணைமீது மோதும்

வருசநாட்டுக் காற்றே

உங்கள் மகனை

உங்கள் மடியில்

ஒப்படைத்துவிட்டோம்

உடைந்த சொற்களின்

கதறல்கள்,

வட்டார வழக்கில் புலம்பல்கள்,

கண்ணாடிப் பெட்டியைக்

கட்டிக் கொண்டு

கண்ணீர் விட்ட மாதரார்,

ஒப்பாரியில் தாலாட்டுப் பாடியே

தங்கள் மகனைத்

தூங்க வைத்துவிட்டார்கள்

தாய்மார்கள்

நாங்கள் யாரும்

கோரிக்கை வைக்காமலே

அரசு மரியாதையளித்த

தமிழ்நாட்டு முதலமைச்சர்

விஜய் அவர்களுக்கு

எங்கள் மண்ணின் நன்றி

துணையிருந்த தோழர்களை

என்னால் மறக்க முடியாது

மாண்புமிகு அமைச்சர்கள்

நிர்மல் குமார், வன்னியரசு

ஆட்சியர் வைத்தியநாதன்,

காவல்துறை டி.ஐ.ஜி சசிமோகன்,

கண்காணிப்பாளர் சினேகப்பிரியா,

செந்தமிழன் சீமான்

மற்றும்

காலம் தூரம் பாராமல் ஓடிவந்த

கலைக் குடும்பத்தார்

அனைத்துக் கட்சித் தலைவர்கள்

இந்நாள் முன்னாள்

நாடாளுமன்ற, சட்டமன்ற

உறுப்பினர்கள்

சந்திரசேகர் ஐ.பி.எஸ்

சிவனாண்டி ஐ.பி.எஸ்

ராஜரத்தினம் ஐ.ஏ.எஸ்

தொழிலதிபர் வணங்காமுடி,

வெற்றி திரையரங்குகளின்

உரிமையாளர்

மதுரை ஐ.வெற்றிவேல்,

கல்வியாளர்

திண்டுக்கல் ரத்தினம்,

வசந்தபவன் ரவி,

பொறியாளர் பழனியப்பன்

போன்ற

நட்பு வட்டாரங்களுக்கும்

வெற்றித் தமிழர் பேரவை

உறவுகளுக்கும் நன்றி

அஞ்சலியில் விழுந்த

ஒவ்வொரு கண்ணீர்த்துளிக்கும்

நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்

இறுதி மரியாதையை

ராஜ மரியாதையாக்கிய

காவல் துறைக்கு

ஒரு கைகூப்பு

ஊடக நண்பர்கள்

அத்துணை பேருக்கும்

எங்கள் தலை வணக்கம்

ஓய்வுகொள் இமயமே!

உன் அடக்கம் முடிந்த

அதே தருணம்

தென்மேற்குப் பருவக் காற்று

தேனிப் பக்கம் வீசிச்

சிறு தூறலிட்டுச் சென்றது

ஏன் தெரியுமா?

உன் குழியில் தள்ளப்பட்ட

பச்சை மண்ணிலிருந்து

உனக்கு

மண்வாசனை வீசத்தான்

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement