advertisement

எஸ்எஸ்சி தேர்வு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் : ஜூன் 17-ல் துவக்கம்!

ஜூன் 12, 2026 5:06 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 'எஸ்எஸ்சி - சிஜிஎல்' (SSC - CGL 2026) தேர்வுக்கான கட்டணமில்லா நேரடிப் பயிற்சி வகுப்புகள் வரும் ஜூன் 17-ஆம் தேதி முதல் துவங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 12,256 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகப் பணியாளர் தேர்வாணையத்தால் தற்பொழுது 'கம்பைன்டு கிராஜுவேட் லெவல்' (CGL) தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு இணையவழியில் (Online) விண்ணப்பம் செய்வதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை (Degree) நிறைவு செய்திருக்க வேண்டியது அவசியமாகும். தகுதியுடைய தேர்வர்கள் வரும் ஜூன் 22, 2026-க்குள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை அறிய விரும்பும் தேர்வர்கள் https://ssc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தைப் பார்வையிடலாம்.

இத்தேர்விற்கான கட்டணமில்லா நேரடிப் பயிற்சி வகுப்புகள், தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வரும் ஜூன் 17, 2026 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு முறைப்படி துவங்கப்படவுள்ளது.

நவீனக் கற்றல் வசதிகள்: இப்பயிற்சி வகுப்புகள் அனைத்தும் தகுதிவாய்ந்த சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு, நவீன 'ஸ்மார்ட் போர்டு' (Smart Board) தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி நடத்தப்படவுள்ளது.

மாதிரித் தேர்வுகள்: தேர்வர்களின் பயிற்சித் திறனை மேம்படுத்தும் பொருட்டு வாரந்தோறும் தொடர்ச்சியான மாதிரித் தேர்வுகள் (Mock Tests) நடத்தப்படும்.

நூலக வசதி: இப்போட்டித்தேர்வுக்குத் தேவையான அனைத்து முக்கியப் பாடப் புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் தேர்வர்களின் பயன்பாட்டிற்காகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மெய்நிகர் கற்றல் தளம்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் அதிகாரப்பூர்வ மெய்நிகர் கற்றல் வலைதளமான www.tamilnaducareerservices.tn.gov.in என்ற பக்கத்தில், அனைத்துப் போட்டித்தேர்வுகளுக்கான விரிவான பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய வருட வினாத்தாள்கள் (Previous Year Question Papers) தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement