advertisement

திருச்சியில்  அனாதை பிணங்களை  நல்லடக்கம் செய்யும் குடும்பத்தினர்!

டிச. 11, 2023 4:32 முற்பகல் |

 


திருச்சி புத்தூர் பகுதியில் இல்லத்திலேயே 10 ஆண்டுகளுக்கு மேலாக அனுதினமும் அன்னதானமும்,
100 புழங்கு பொருட்களை வைத்து புழங்கு பொருட்கள் காட்சியகமும், 1000  அனாதை பிணங்கள் நல்லடக்க பணியிலும், 10000 நூல்கள் கொண்டு இலவச நூலகமும் நடத்தி வருகின்றனர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர்  சித்ரா விஜயகுமார், சட்டப் படிப்பை பயின்று வரும் கீர்த்தனா விஜயகுமார்.  

இது குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,திருச்சியில் மயான பூமியில் மனைவி, மகளுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருகிறோம்.
மரணமானது துயரத்தின் உச்சம் ஆகும்.இறந்தவரின் உடலை அவரின் சொந்த இருப்பிடத்துக்கோ, வீட்டுக்கோ, நெருக்கமானவர்களிருக்கும் ஊருக்கோ உறவினர்க்கோ தகவல் கொடுக்க முடியாமல் அமரர் அறையில் உரிமை கோரப்படாத உடல்கள் ஏராளம் உள்ளன. இப்படி உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகிறோம். 

புராண, இதிகாச காலம்தொட்டு மயானங்களில் இந்து மதத்தில் பெண்களுக்கு இடுகாட்டில் அனுமதி இல்லை என்ற நிலை இன்றளவும் தொடர்ந்து வருகிறது. ஒரு வீட்டில் இறப்பு ஏற்பட்டால் சுடுகாட்டில் அல்லது உடலை புதைக்கும் இடுகாட்டில் ஆண்கள் தான் இறுதி காரியங்களை செய்து வருவார்கள். பெண்கள் வீட்டில் காரியங்களை செய்வதோடு சரி. சுடுகாட்டில், மயானத்தில் காரியங்கள் செய்வதற்கு பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. உயிருக்கு உயிராக நேசித்த கணவர் அல்லது பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்களின் உடலுக்குக்கூட அந்த இடத்தில் இறுதியாக முகத்தை கூட பார்க்க அனுமதிக்கப்படாத இந்த உலகில் மனைவி மகளுடன் ஆதரவற்ற அனாதை பிரேதங்களை அச்சமின்றி அடக்கம் செய்து வருகிறோம். மனைவி சித்ரா வழக்கறிஞர் பணியினை செய்து வருகிறார். மகள் கீர்த்தனா வழக்கறிஞர் பட்டப்படிப்பினை படித்து வருகிறார்.

உலகம் எவ்வளவோ முன்னேறினாலும் வறுமை மாறாமல் தொடா்கிறது.கொடிது கொடிது வறுமை கொடிது
வறுமையின் விளைவை களப் பணியால் அறிந்து அதற்குண்டான அணுகு முறை கொள்கையுடன் தினசரி உணவகங்களில் உபரியாகும் உணவினை பெற்று வறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் ஆண்டு தோறும் உணவளித்து வருகிறோம்.வறுமையை உணா்வுப்பூா்வமாக கள ஆய்வில் கண்டுள்ளோம். ‘ஏழ்மையான பொருளாதாரத்தாலோ முதுமை மற்றும் நோயின் அடிப்படையில் காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு சாலையோரங்களிலேயே உண்டு உறங்கி கையேந்தி பிச்சை எடுத்து ஜீவனம் நடத்தி மருத்துவ சிகிச்சை இன்றி உடல் நலம் குன்றி குற்றுயிராக உருக்குலைந்து அழுக்கு படிந்த உடல், ஏக்கம் நிறைந்த கண்கள், கறை படிந்த பற்கள், கிழிந்த உடையுடன் சாலை ஓரங்களிலேயே இறந்து போய் விடுகிறார்கள். இவர்கள் போதிய பண வசதி இல்லாமல் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருவது எங்களது ஆய்வில் தெரிகிறது. உற்றார் உறவினர் சகோதர சகோதரிகள் உதாசீனத்தால் உறவின்றி பொது மக்களிடம் கையேந்தி வாழ்க்கையினை நடத்துகின்றனர்.

பல ஏளனத்திற்கு ஆளானவர்கள் படும் கோபம், வேதனை, துக்கம், துயரத்தால் இவர்கள் நிம்மதியாக தூங்கவோ, வேலை செய்யவோ அல்லது சாப்பிடவோ முடிவதில்லை. இவர்களது வேதனைக்கு முக்கியக் காரணியாய் அமைவது உடல்நலக் குறைவும் முதுமையும் தான். மிகவும் ஏழ்மையான வா்க்கத்தைச் சோ்ந்தவர்கள். சாப்பிடுவதை குறைத்தும், ஒரு வேளை சாப்பிடுவதை முற்றிலும் தவிா்த்தும் உள்ளனா். இதனால் இவா்களின் மகிழ்ச்சியும் காற்றோடு கலந்து விடுகிறது.ஏன் அடிப்படை உரிமைகளான வீட்டை இழந்து குடும்பத்தை மறந்து தங்களின் சமூகப் பிணைப்பில் இருந்து விலகி ஒரு நிலையற்ற வாழ்வை வாழ்கின்றனா்.

இப்படி வறுமையில் வாழும் அவா்களின் துன்பங்களும் துயரங்களும் குறித்து சொல்லப்படாதவை ஏராளம். எப்படி இருப்பினும் இன்னும் வறுமை தீா்ந்தபாடில்லை. தொடர்கிறது.ஆதரவற்ற அனாதை பிரேத நல்லடக்க பணியினை மனைவி, மகளுடன் செய்யும் போது பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னைப் பொறுத்தவரை இது ஒரு புனிதப் பணியாக நான் கருதுகிறேன். இவர்களுக்கு மரியாதை செய்ய ஆளில்லை மலர்மாலை அணிவிக்க யாருமில்லை இறுதி ஊர்வலத்திற்கு யாருமில்லை. பிரேதத்திற்கு வாய்க்கு அரிசி போட ஆளில்லை.நாங்கள் சுயநலம் பார்க்காமல் பொதுநலன் சார்ந்ததாகவே இறுதி சடங்கினை செய்கிறோம்.கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது பல உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம்.

மேலும் தனிப்பட்ட முறையில் 25  முறை குருதிக்கொடை வழங்கியும்,3 ஜோடி கண்களை கண்வங்கிக்கு பெற்றுகொடுத்தும், 40க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டும்,  வாழ்நாளிற்கு பிறகு படமாய் இருப்பதை விட பாடமாய் இருப்போம் என எனது உடலினை தானமாக வழங்க உறுதியேற்று மனைவி மகள் ஒப்புதலுடன் திருச்சி கி. ஆ. பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்துள்ளேன் என்றார்.னைவி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்  மகள் கீர்த்தனா விஜயகுமார் இருவரும் விடுமுறை நாட்களில் இயன்ற அளவு உரிமை கோரப்படாத உடல்களை நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாவட்டத்தில் அனாதை பிணங்கள் நல்லடக்க உதவிக்கு 
  யோகா ஆசிரியர் விஜயகுமார் 9842412247

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement