மேலஆத்தூரில் சிறப்பு கால்நடை சுகாதார முகாம்
மேலஆத்தூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மேல ஆத்தூர் ஊராட்சியில் நேற்று (08.06.2025) கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் துவக்கி வைத்தார் .
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது, இந்த சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவைசிகிச்சை போன்ற சில அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள், கால்நடைகள் மற்றும் கோழியினங்களுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும், கால்நடை வளர்ப்பில் உண்டாகும் பல்வேறு சந்தேகங்களுக்கு முகாமில் பங்கேற்கும் கால்நடை வல்லுநர்கள் பதிலளிப்பார்கள். எனவே, கால்நடை வளர்ப்போர்கள் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் நன்கு பயன்படுத்திக்கொண்டு, நோயில்லாத ஆரோக்கியமான கால்நடைகளை வளர்த்து தங்களுடைய குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், 3 கால்நடை வளர்ப்போருக்கு சிறந்த கிடேரி கன்றுகளுக்கான பரிசுகளையும், 3 கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதுகளையும் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, கூட்டுறவுத்துறையின் மூலமாக 7 பயனாளிகளுக்கு தலா ரூ.60 ஆயிரம் கால்நடை பராமரிப்புக் கடனுதவிகளும், ஏற்கனவே, கால்நடை பராமரிப்புக் கடனுதவியாக தலா ரூ.60 ஆயிரம் பெற்று, பசுமாடு வாங்கிய 2 பயனாளிகளுக்கு கால்நடை தீவனங்களையும், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து நடத்திய கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்துகொண்டு, கால்நடை பராமரிப்பு தொழிமுனைவோர் பயிற்சி பெற்ற 11 கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர், திருநங்கையருக்கான திறன் பயிற்சி சான்றிதழ்களையும் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
அலுவலர்கள், கால்நடை வளர்ப்போர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துக்கள்