குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!
தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக மும்பைப் பங்குச் சந்தை, தேசியப் பங்குச் சந்தை நிர்வாகங்களுக்கு சன் டிவி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய திமுக அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ தயாநிதி மாறன் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. தயாநிதி மாறன் தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் சன் டிவி நெட்வொர்க்கின் பங்குகள் வெள்ளிக்கிழமை 5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன.
இந்த நிறுவனத்தின் பங்குகள் இன்று காலை 5.25 சதவீதம் வரை சரிந்து ஒரு பங்குக்கு ரூ.580 ஆக இருந்தது, இது இந்த ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதிக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும். காலை 9:40 மணி நிலவரப்படி நிஃப்டி 50 இல் 0.17 சதவீத முன்னேற்றத்துடன் ஒப்பிடும்போது, பங்கு சில இழப்புகளைச் சரித்து 3.8 சதவீதம் குறைந்து ரூ.588.9 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.
தற்பொழுது, சன் டிவி குழுமத்தின் பங்குகள் மளமளவென சரிய தொடங்கிய நிலையில், தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக மும்பைப் பங்குச் சந்தை, தேசியப் பங்குச் சந்தை நிர்வாகங்களுக்கு சன் டிவி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ”குற்றச்சாட்டுகள் தவறானவை, அவதூறானவை, ஆதாரமற்றவை. இது குடும்ப விவகாரம் மட்டுமே. தற்போதுள்ள பிரச்னைக்கும் வர்த்தகத்துக்கும் தொடர்பில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில், 22 ஆண்டுகளுக்கு முன் நடந்தவை இது, செய்தியில் குறிப்பிட்டவையில் உண்மைதன்மை இல்லை, தவறான தகவல்கள் உள்ளது. சட்டத்துக்கு உட்பட்டே எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது
அதுமட்டும் இல்லாமல், ‘செய்திகளில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் நிறுவனத்தின் வணிகம் அல்லது அதன் அன்றாட செயல்பாடு மற்றும் விளம்பரதாரரின் குடும்ப விவகாரத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என சன் டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள்