தூத்துக்குடி மாவட்டத்தில்மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்ய மானியம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளர்ப்புத் தொழில் செய்யும் விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக அதிகபட்சம் 10 ஆயிரம் எண்ணிக்கையிலான மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் மீன்வளர்ப்புத் தொழில் செய்யும் விவசாயிகள் தங்கள் மீன்பண்ணைகளை பதிவு செய்து அரசு மானியத் திட்டங்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்த விவசாயிகள் நிலையான மீன்வளர்ப்பை தொடர்ந்து மேற்கொள்ளும் பொருட்டும், மீன்உற்பத்தி மூலதனமான மீன்குஞ்சுகளின் செலவினத்தை குறைக்கும் பொருட்டும் பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்ய உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து மீன்வளர்ப்புத் தொழில் செய்யும் விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சம் 10 ஆயிரம் எண்ணிக்கையிலான மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்ய ரூ.5000 மானியமாக வழங்கப்பட உள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு விவசாயிகள் இந்தத்திட்டத்தின் கீழ் மானியத்தைப் பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 166 வடக்கு பீச்ரோடு, தூத்துக்குடி என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0461-2320458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்