திமுக அரசின் மிரட்டலுக்கு அச்சப்படமாட்டேன்: பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ பரபரப்பு பேட்டி!
திமுக அரசின் மிரட்டலுக்கு நானோ, எனது புரட்சி பாரதம் கட்சியோ அடி பணியமாட்டோம் என்று கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான பூவை ஜெகன் மூர்த்தி செய்தியாளர்களிடம் இன்று (ஜூன் 20) பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: திமுக அரசு க்கு எதிராக சட்டமன்றத்திலேயும், மக்கள் மன்றத்திலேயும் நான் பேசி வருகிறேன். மக்களின் கோரிக்கைகளுக்காக நான் பேசி வருகிறேன். அதற்காக என் மீது உள்ள காழ்புணர்ச்சி காரணமாக திமுக அரசு எனக்கு சம்பந்தம் இல்லாத இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளது. இதில், எனக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு சில கருத்துக்களை கூறியிருக்கிறது.
என் மீது தவறாக சொன்ன கருத்துக்களை அந்த நீதிபதி மாற்றி இருக்கிறார் என்பது உண்மை. மற்ற தகவல்களை நீதிமன்றத்தில் நான் கூறியிருக்கிறேன். நீதிமன்றம் என்ன முடிவெடுக்கிறதோ அதன்படியே சட்டத்துக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம். தமிழக அரசுக்கும், எனக்கும் என்ன பிரச்னை உள்ளது. நான் என்ன பயங்கரவாதியா, யாராக இருந்தாலும் காவல்துறை ஆதரவு தான் கொடுக்கிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை முறைகேட்டில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் சல்யூட் அடித்து விமானத்தில் அனுப்பி வைத்துள்ளனர். அவரை ஏன் இதுவரை தமிழக அரசோ, தமிழக காவல்துறையோ கைது செய்ய வில்லை. எத்தனை கோடி லஞ்சம், ஊழல் நடைபெற்றுள்ளது. இதையெல்லாம் கண்டு கொள்ளாத காவல்துறையும், திமுக அரசும் எந்த பிரச்னையும் இல்லாமல் உள்ள சாதாரண மனிதருக்கு இவ்வளவு நெருக்கடி கொடுக்க காரணம் என்ன.
திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த நபரின் தம்பியை கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக திருவாலங்காடு போலீசார் பூவை ஜெகன் மூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்கள்