advertisement

கலைஞர் பல்கலைக்கழக மசோதா விவகாரத்தில் கவர்னருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

ஆக. 06, 2025 9:53 முற்பகல் |


 
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்த கவர்னரை சந்திக்க நேரம் கேட்டாலும் அனுமதி கிடைக்கவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக கவர்னராக ஆர்.என். ரவி நியமனம் செய்யப்பட்டதிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை முடக்குகின்ற வகையில் நாள்தோறும் செயல்பட்டு வருகிறார். கவர்னர் மாளிகையை தமிழக பா.ஜ.க.வின் கிளை அலுவலகமாக மாற்றி வருகிறார். ஆர்.எஸ்.எஸ்.ன் நச்சுக் கருத்துகளை பரப்புகின்ற ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார். மேலும், கடந்த சில ஆண்டுகளாக பத்திற்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் முடக்கி வைத்திருந்தார். 


இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியது. இதன்மூலம் கவர்னரின் அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடப்பட்டது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கால நிர்ணயம் செய்து ஆணை பிறப்பித்தது மாநில உரிமைகளை பாதுகாக்கின்ற நடவடிக்கையாக கருதப்பட்டு நாடு முழுவதும் வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த தீர்ப்பை உதாசீனப்படுத்துகின்ற வகையில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என். ரவி அனுமதி அளிக்காமல் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். 
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் தாக்கல் செய்து, நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வாழும் மாணவர்களின் மேம்பாட்டிற்காக கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட உள்ளது. கருணாநிதி பெயரிலான பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்-அமைச்சரும், உயர்கல்வித்துறை அமைச்சரும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இனி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடுத்து கவர்னருக்கு மறுபடியும் புத்தி புகட்டுகின்ற வகையில் ஆணையை பெறுவதன் மூலமே மாநில உரிமைகளை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மசோதா மீது முடிவெடுக்க கவர்னர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு 3 மாதங்கள் மட்டுமே காலக்கெடு விதித்திருந்தது. இந்த கால தாமதம் மீறப்பட்டதால் தற்போது தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement