அறந்தாங்கி அருகே கல்லூரி மாணவி, காதலன் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியை அடுத்த புறங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சர்வேஷ் (வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். நெமெலிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகள் 17 வயது மகளுடன் புதுக்கோட்டையில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர்கள் 2 பேரும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை திருவப்பாடி அருகே உள்ள அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாக படித்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் கல்லூரியில் சேர்ந்த பிறகும் அவர்களது காதல் தொடர்ந்தது. இதனை மாணவியின் பெற்றோர் மீண்டும் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த சம்பந்தப்பட்ட மாணவி கடந்த 28-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி அன்று இரவே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையறிந்த அவரது காதலன் மனமுடைந்து வீட்டில் இருந்த உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்