பதினொராம் வகுப்பு தேர்வில் தோல்வி; ரெயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை..!
11-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் 17 வயது மாணவன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த தர்மபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்சி டிரைவர் சூரிய நாராயணன். இவரது மனைவி புஸ்பலதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.
இந்நிலையில் நேற்று வெளியான 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவில் மாணவர் 273/600 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால் வணிகவியல் பாடத்தில் தோல்வியுற்றுள்ளார். இதனால் விரக்தி அடைந்து மாணவர் மனமுடைந்து போயுள்ளார். இதனால் நேற்று மாலை கொடைரோடு அருகே திண்டுக்கலில் இருந்து மதுரை மார்க்கமாக சென்ற தேஜஸ் ரயிலின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடைரோடு இருப்பு பாதை காவல் துறை சார்பு ஆய்வாளர் அருணோதயம் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட மாணவர் உடலை கைப்பற்றினர். பின்னர் உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
கருத்துக்கள்