advertisement

திருவண்ணாமலை : மாணவர்களிடம் வழிப்பறி அரைமணி நேரத்திற்குள் பிடித்த போலீசார்

ஜூன் 06, 2026 5:39 முற்பகல் |

 

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை காவலர்கள் அரை மணி நேரத்திற்குள் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் மாலை பெரியார் சிலை பகுதி வழியாக ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர்.அப்போது மோட்டார்பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென அவர்களை வழிமறித்து, கையில் வைத்திருந்த செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்துச் சென்றனர்.மேலும், கொள்ளையை தடுக்க முயன்ற மாணவர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனடியாக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் காவலர்கள் சம்பவப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அதில் கிடைத்த தடயங்களின் அடிப்படையில் வழிப்பறியில் நேரடியாக ஈடுபட்ட இருவரையும், அவர்களுக்கு உதவியாக இருந்த ஒருவரையும் அரை மணி நேரத்திற்குள் சுற்றிவளைத்து பிடித்தனர்.இந்த விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையைச் சேர்ந்த கிஷோர் (21), மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் (23) மற்றும் தினேஷ் (23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் காவலர்கள் கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement