தூத்துக்குடி மாவட்ட அரசு கல்லூரிகளில் மாணவர் சேர விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 512 இடங்களும், நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 400 இடங்களும், சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 464 இடங்களும், ஓட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 280 இடங்களுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ/மாணவியர்களுக்குப் 'புதுமைப்பெண்' மற்றும் 'தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலமாக ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டம்' மூலம் வேலைவாய்ப்பிற்கான பயிற்சிகள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகள் மற்றும் இலவசப் பேருந்து வசதிகளும் உள்ளன. திறமை வாய்ந்த ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வருகின்ற 27.05.2025 வரை பதிவுசெய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.48/- மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும், SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் எதுமில்லை, பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும்.
மேலும், மாணவ - மாணவியர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வழியாக வருகின்ற 27.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை Debit Card / Credit Card/Net Banking/ UPI போன்றவை மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், 044 24343106/24342911 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்