advertisement

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா சப்பர பவனி கோலாகலம்:

ஆக. 06, 2025 5:06 முற்பகல் |

 


தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதாவின் 443-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழா நாட்களில் ஜெபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான அன்னையின் சப்பர பவனி நேற்று நடந்தது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி, 5.30 மணிக்கு 2-வது திருப்பலி, காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர்.

9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில் தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்கான சிறப்பு திருப்பலியும், 10 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்கான சிறப்பு திருப்பலியும், பகல் 12 மணிக்கு தூத்துக்குடி மண்ணில் பிறந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து நிறைவேற்றிய சிறப்பு நன்றித் திருப்பலியும், மாலை 5 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் நடந்தது.

இரவு 7 மணியளவில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி தொடங்கியது. பேராலய வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பனிமய மாதா அன்னையை பக்தர்கள் நகர வீதிகளில் பவனியாக எடுத்து வந்தனர். அப்போது ஆலயத்தை சுற்றிலும் மக்கள் வெள்ளம் போல் திரண்டு இருந்தனர். ஏராளமானவர்கள் சப்பரத்தை தூக்கி வந்தனர். பவனி வந்த அன்னையை வரவேற்கும் வகையில் இருபுறமும் கட்டிடங்களில் நின்றும் திரளானவர்கள் தரிசனம் செய்தனர்.

விழாவினை ஒட்டி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement