advertisement

எந்த புகாராக இருந்தாலும் பொதுமக்கள் தெரிவிக்கலாம் - தூத்துக்குடி மேயர் தகவல்

அக். 22, 2025 12:13 பிற்பகல் |

எந்த புகாராக இருந்தாலும் கால் சென்டர் அல்லது மேயர், ஆணையர் தொலை பேசி எண்களுக்கு புகாராக பொதுமக்கள் தெரிவிக்கலாம்,என குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஒவ்வொரு புதன்கிழமையிலும் ஒவ்வொரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் பழைய நகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தார். மண்டலத்தலைவர் கலைச்செல்வி வரவேற்புரையாற்றினார்.

முகாமை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க இந்த முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்தில் தங்களது பதிவுகளை பதிவு செய்து வருகின்றன. அதை முறையாக பார்வையிட்டு அந்த பணிகளும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இந்த குறைதீர்க்கும் முகாம் கடந்த 16 மாதங்களாக 4 மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனடிப்படையில் தொடர்ந்து இதுபோன்ற முகாம்கள் நடைபெறுகிறது. வடகிழக்கு பருவ மழை 4 நாட்களாக பெய்து வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் 58 வார்டுகளில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் ரெகுலராக இருந்து வருகிறது. 16, 17 ஆகிய வார்டுகளில் மட்டும் 3 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதிலும் மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. 

16, 17, 18 ஆகிய 3 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகளும், சாலை அமைக்கும் பணிகளும் நடைபெறுவதால் மழைநீர் தேங்கியுள்ளது. அதையும் முறைப்படுத்தி அப்புறப்படுத்தி வருகிறோம். இந்த பகுதியில் மழை காலம் முடிந்து ஜனவரிக்குப் பின் சாலை அமைக்கும் பணி நடைபெறும். மாநகரில் உள்ள பல விளையாட்டு திடல், பூங்கா உள்ளிட்டவைகளில் தேங்கிய மழைநீரும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வடகிழக்கு பருவமழையின் போது கால் சென்டருக்கு 40 புகார்கள் வந்த நிலையில் அவை அனைத்திற்கும்; தீர்வு காணப்பட்டுள்ளது. வார்டு 3, 7 ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாத நிலை உள்ளது. அங்கும் மழை காலத்திற்குப் பின் முழுமையாக சாலை பணி துவங்கும். மாநகராட்சிக்குட்பட்ட தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் 27 கி.மீ தூரம் உள்ளது. அதில் மழையால் சேதமடைந்து காணப்படும் சிறிய குழிகள் பொதுமக்கள் நலன் கருதி மாநகராட்சி சார்பில் பேட்ச் ஒர்க் முழுமையாக நடைபெறும். 

மாநகராட்சி பகுதிக்குள் எல்லா பணிகளையும் முறைப்படுத்தி முறையாக கண்காணித்து வருகிறோம். கிழக்கு மண்டலத்தில் இதுவரை பெறப்பட்ட 789 மனுக்களில் 769 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதில் 20 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது. 4 மண்டலங்களிலும் 3200 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட 1258 மனுக்களில் 1247 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 11 மனுக்கள் நடவடிக்கையில் இருந்து வருகின்றன. பொதுமக்கள் ஒத்துழைப்பு மாநகராட்சிக்கு அவசியம். எந்த புகாராக இருந்தாலும் கால் சென்டர் அல்லது மேயர், ஆணையர் தொலை பேசி எண்களுக்கு புகாராக தெரிவிக்கலாம். எல்லோருக்கும் சுகாதாரம் முக்கியம் என்பதையும் கருத்தில் கொண்டு அதற்கான முகாம்களும் நடைபெறும் என்று கூறினார். பின்னர் பிறப்புச்சான்றிதழ் ஒருவருக்கு உடனடியாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணக்குமார், உதவிஆணையர் வெங்கட்ராமன், பொறியாளர் தமிழ்செல்வன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர்அகமது, நகர் நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் நெடுமாறன். இளநிலை பொறியாளர் பாண்டி, உதவி பொறியாளர்கள் அனுசவுந்தர்யா, அபிலாவண்யா, ஹரிகிருஷ்ணன் தொழில்நுட்ப உதவியாளர்கள் சரன்பிரசாத், பிரின்ஸ் பிரதீப், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் ராமுஅம்மாள், எடின்டா, பேபி ஏஞ்சலின், மகேஸ்வரி, ரெக்ஸ்லின், மும்தாஜ், மரியகீதா, வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், பொன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், வட்ட பிரதிநிதி மூக்கையா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட பொதுமக்கள் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement