advertisement

திருச்செந்தூர் கந்த சஷ்டிக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது: தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

அக். 25, 2025 4:49 பிற்பகல் |

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டித் திருவிழாவினை முன்னிட்டு வாகன சிறப்பு அனுமதி அட்டை (Vehicle Pass) வழங்கும் முறை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார். 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் 2025 ஆம் ஆண்டு கந்த சஷ்டித் திருவிழா 22.10.2025 அன்று முதல் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இத்திருவிழாவானது 28.10.2025 வரை நடைபெறவுள்ளது. 27.10.2025 அன்று மாலை 04.00 மணியளவில் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி எழுந்தருளல், 28.10.2025 அன்று அதிகாலை 05.30 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், அன்று மாலை 06.00 மணியளவில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்று விழா நடைபெற்று அன்று இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறவுள்ளது. 

கந்தசஷ்டித் திருவிழாவில் பல இலட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருக்கோவிலுக்கு வருகின்ற பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் திருக்கோயிலின் சார்பில் பல்வேறு முன்னேறுபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கடந்த வாரம் பெய்த தொடர் கனமழை காரணமாக வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள காரணத்தினாலும், வருகின்ற 27.10.2025 அன்று கனமழை பெய்ய கூடும் என வானிலை முன்னெச்சரிக்கை உள்ளபடியாலும், பொதுமக்கள் அதற்கு தகுந்தாற்போல் தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மேலும், தனி நபர் வாகனங்களை தவிர்த்து விட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்தி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டித் திருவிழாவிற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சூரசம்ஹாரத்திற்கென தனியாக ஏதும் வாகன சிறப்பு அனுமதி அட்டை (Vehicle Pass) வழங்கபடவில்லை என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement