தூத்துக்குடியில் டிச.19 ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற டிச.19 ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, "தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் டிச.19 ம் தேதி அன்று மாலை 5 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கேஸ் சிலிண்டர் விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள். எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் நேரில் அளித்திடலாம்.
இந்நேர்வில் பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய சிலிண்டர் வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெபாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் இக்கூட்டத்தில் எடுத்துரைத்து தீர்வு காணவும் பொதுமக்கள் இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.





கருத்துக்கள்