தேர்தல்அறிக்கை தான் எங்கள் சூப்பர்ஸ்டார் : தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தூத்துக்குடி மாவட்டத்தின் 6 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்துச் சங்கரப்பேரி விலக்கு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்காத நிலையில், தமிழக அரசு ரூ.666 கோடி நிதியுதவி வழங்கியது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா ரூ.6,000 வழங்கப்பட்டது.
"தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்டேன் என்று பொய் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் அவரது பொய்கள் அம்பலமாகிவிட்டன. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தை மூடிமறைக்கப் பார்த்தவர் அவர். காலில் விழுவதும், காலை வாரிவிடுவதுமே அவரது அரசியல் வாழ்க்கை" என முதல்வர் கடுமையாகச் சாடினார்."மத்திய அரசுடன் சமரசம் செய்துகொண்டு 4 ஆண்டுகள் ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமியால் நீட் விலக்கைப் பெற முடிந்ததா? அல்லது தமிழகத்திற்கு நிதிதான் வாங்க முடிந்ததா?"
"எங்களது தேர்தல் அறிக்கையே இந்தத் தேர்தலின் 'சூப்பர் ஸ்டார்'. இது திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கான தொடக்கம்" என்றார்.
இந்தக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், வேட்பாளர்கள் மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பிரசாரத்தை முடித்த முதல்வர், தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.





கருத்துக்கள்