advertisement

செங்கல்பட்டு அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டி கொலை - மறியல்

ஜூன் 30, 2025 9:28 முற்பகல் |

 

கூவத்தூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் கத்தியால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த காத்தான்கடை பகுதியில் பெட்ரோல் பங்க் வைத்திருந்தார் கூவத்தூர் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (48). இவர் வழக்கம்போல் நேற்றிரவு பெட்ரோல் பங்கை மூடிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது காத்தான்கடை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மோகன்ராஜை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்நிலையில் கூவத்தூர் E5 காவல் நிலைய காவலர்கள் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை செய்யப்பட்டது குறித்து அறிந்த காத்தான்கடை அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் ஒன்றுதிரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து தமிழக அரசும் காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து தவகலறிந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர் அறிவழகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளிடம் கொலை சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்தார். அதனையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement